புதன், 18 ஜனவரி, 2012

"பிளாஸ்டிக்' அரக்கனை அழிப்போம்



"பிளாஸ்டிக்' அரக்கனை அழிப்போம்



எங்கும், எதிலும் பிளாஸ்டிக்கின் பயன்பாடு எல்லை தாண்டிவிட்டது. மனிதர்களும் பிளாஸ்டிக்கும் பிரிக்க முடியாத ஒன்று என்ற மோசமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
 உலகம் முழுவதும் ஆண்டுக்கு 10 கோடி டன் பிளாஸ்டிக்கில் ஏராளமான பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. இதில் 2.5 கோடி டன் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டுக்குப் பின்னர் மக்காதவை.
 இப்படி மனித வாழ்வோடு கலந்துவிட்ட பிளாஸ்டிக்கால், இந்தப் புவியில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் கடும் தீங்குதான் ஏற்படுகிறது. இதன் கோரத்தைப் புரிந்து கொள்ளாமல் பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துவதை நவ நாகரிகமாகவே (?) நினைக்கின்றோம்.
 பிளாஸ்டிக் பொருள்கள் பெரும்பாலும் பாலிஎத்திலீன், பாலிவினைல் குளோரைடு, பாலிஸ்டைரின் ஆகிய ரசாயனப் பொருள்களால்தான் தயாரிக்கப்படுகின்றன.
 இவற்றை ரசாயனப் பொருள்கள் என்று சொல்வதைவிட "உயிர்க்கொல்லிகள்' என்று சொல்வதே சாலப்பொருத்தமாக இருக்கும்.
 அந்த அளவுக்கு இவை கொடியவை. பிளாஸ்டிக் பொருள்களைத் தயாரிக்கும் போதும் பயன்பாட்டுக்குப் பின்னர் அவற்றை மறுசுழற்சி செய்யும் போதும் அவற்றில் இருந்து வெளிவரும் நச்சுகளால் ஏற்படும் தீங்குகள் கொஞ்ச நஞ்சமல்ல.
 பிளாஸ்டிக் பொருள்கள் தயாரிப்பின்போது அதில் இருந்து எத்திலீன் ஆக்ûஸடு, பென்சீன், சைலீன் போன்ற கொடிய நச்சுகள் வெளியேறுகின்றன. இதனால் ஒட்டுமொத்த சுற்றுச்சூழலும், பல்லுயிர்ப்பெருக்கமும் சீரழிகின்றன.
 இந்த நச்சுகள் கலந்த காற்றைச் சுவாசிப்பதால் புற்றுநோய், சிறுநீரகச் செயலிழப்பு, நரம்புத்தளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு கொடிய நோய்கள் மனிதர்களைத் தாக்குகின்றன. பிளாஸ்டிக் நச்சுகள் கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் கலப்பதால் அவற்றில் வசிக்கும் உயிரினங்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிறது. சில அரிய வகை உயிரினங்கள் அடியோடு அழியும் நிலை ஏற்படுகிறது.
 இந்த அபாயச் சூழல் குறித்து உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நீண்டகாலமாகவே உரக்கக் குரல் கொடுத்து வருகிறார்கள். ஆனால், இந்தக் குரல் ஆட்சியாளர்களின் செவியில் விழவில்லை. செவிடன் காதில் ஊதிய சங்காய்தான் உள்ளது.
 இந்தியாவின் நகர்ப்புறங்களில் ஓராண்டுக்குச் சேரும் மொத்தக் கழிவுகளில் 20 சதவிகிதம் பிளாஸ்டிக் கழிவுகள்தான். இதனால் நகர்ப்புற மக்களுக்குக் கடும் தீங்கு ஏற்படுகின்றது.
 மும்பையில் 1998-ல் பெய்த பலத்த மழையின் போது அங்குள்ள கழிவுநீர் கால்வாய்களில் பிளாஸ்டிக் குப்பைகள் அடைத்திருந்ததால் மழைநீர் வழிந்தோடவில்லை.
 வெள்ளம் தேங்கியதால் மும்பையே வெள்ளத்தில் மிதந்தது. அப்போது அந்நகர மக்கள் சந்தித்தத் துயரத்தைச் சொல்லிமாளாது.
 அதேபோல உத்தரப் பிரதேச மாநிலத்தின் நகர்ப்புறங்களில் குப்பைகளில் கிடந்த பிளாஸ்டிக் பைகளை சாப்பிட்ட 100 பசுமாடுகள் செத்து மடிந்ததாகவும், ஒரு பசுவின் வயிற்றில் 35 கிலோ பிளாஸ்டிக் பைகள் இருந்ததாகவும் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் வெளியான செய்தி நாட்டையே உலுக்கியது. பிளாஸ்டிக்கின் கோரத்தை வெளிப்படுத்தியது.
 இருப்பினும் இதை ஆட்சியாளர்கள் உணர்ந்தார்களா? அந்த மோசமான நிகழ்வுக்குப் பிறகும் பிளாஸ்டிக் குப்பைகளைக் கையாளுவதில் மகாராஷ்டிர, உத்தரப் பிரதேச அரசுகளிடம் எவ்வித மாற்றமும் இல்லை. இதை ஒரு பாடமாகப் பிற மாநிலங்களும் எடுத்துக்கொண்டதாய் தெரியவில்லை.
 மத்திய அரசும் சரி, மாநில அரசுகளும் சரி பிளாஸ்டிக் பொருள்களை ஆராதிப்பதில்தான் முனைப்பு காட்டுகின்றன.
 தமிழகத்தைப் பொறுத்தவரை 90 சதவிகித வணிக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பைகள் இடம்பிடித்துள்ளன. பெட்டிக் கடைகளும் இதற்கு விதிவிலக்கல்ல.
 மாநகரங்களில் தொடங்கி கடைக்கோடி கிராமம் வரை தெருக்களில் எங்கு பார்த்தாலும் கலர் கலராய் காட்சி அளிக்கின்றன. இவற்றால் கிராமங்கள் தங்களது பாரம்பரிய அடையாளங்களைத் தொலைத்து நிற்கின்றன.
 கூடுமானவரை பிளாஸ்டிக் புறக்கணிப்பு என்ற கொள்கையை வகுத்து அரசு செயல்பட வேண்டும்.
 இந்த விஷயத்தில் அதிகாரிகளுக்கு ஆர்வமும் அவசியம். மக்களுக்கு பிளாஸ்டிக்கால் ஏற்படும் கொடிய தீங்குகள் குறித்து எடுத்துக் கூற வேண்டும். தங்களால் இயன்றவரை பிளாஸ்டிக் ஒழிப்புக்கு தங்களது பங்களிப்பை நல்க வேண்டும்.



thanks dinamani

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக